Friday 22 November 2019

புன்னை மரம்


புன்னை மரம்

மரங்கள், மண்ணுக்கும் மனிதனுக்கும் நன்மைகள் செய்யவே, இயற்கையால் படைக்கப்பட்டவை, என்பதை உணர்த்தும் இன்னொரு அடையாளம், புன்னை மரம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வில் ஒன்றெனக் கலந்ததுதான், தொன்மையான இந்தப் புன்னை மரங்கள்.
அனைத்துவகை மண்களிலும், ஈரமான இடங்களிலும் வளரும் தன்மையுள்ள புன்னை மரங்கள், மணற்பாங்கான இடங்களிலும் செழித்து வளரும் தன்மை மிக்கவை. அதிகமாக ஆற்றங்கரைகளில், கடலோரங்களில் காணப்படுகின்றன. நன்னீர் உள்ள நிலங்களில்தான் என்று இல்லாமல், மற்ற மரங்கள் வளர முடியாத சூழல் கொண்ட, கடல் சார்ந்த உப்பு நீர் உள்ள மணற்பாங்கான இடங்களிலும், பூச்சித் தாக்குதல் மற்றும் பாதிப்புக்கள் இன்றி, வளரும் தன்மை உடையவை, புன்னை மரங்கள்.

புன்னை மரங்களின் இலைகள் அளவில் பெரிதாக, பசுமை வண்ணத்தில் பொலிவாகக் காணப்படும், இதன் பூக்கள் கொத்துக்கொத்தாக, கண்களைக் கவரும் வண்ணம் அமைந்திருக்கும், அதிக சதைப்பற்றுடன் இருக்கும் புன்னைமரக் காய்கள் உருண்டை வடிவத்தில், காணப்படும். புன்னை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் மற்றும் மரப்பட்டைகள் அனைத்தும் சிறந்த மருத்துவப் பயன்கள் தர வல்லவை. கடும் கோடைக் காலத்திலும், இதன் இலைகள் வறண்டு காய்ந்து போகாமல், வருடம் முழுவதும், பசுமையான இலைகளுடன், பச்சைப் பசேல் என்று, அடர்ந்து படர்ந்த கிளைகளுடன், நிழல் தரும் மரமாக விளங்குபவை, புன்னை மரங்கள். கோடையில் புன்னை மர நிழலில் அமர, இதன் மலர்களின் அற்புத நறுமணம் காற்றில் கலந்து, அந்தப் பகுதியையே, மணமிக்கதாக மாற்றி விடும், புன்னை மர நிழலில் சற்று நேரம் அமர்ந்திருந்தால், புன்னை மரக் காற்றில் கலந்துள்ள உள்ள அதிக அளவு ஆக்சிஜனால், சுவாசம் வளமாகி, மன அழுத்தம் நீங்கி, புத்துணர்வு பெற ஒரு வாய்ப்பாக அமையும்.

புன்னை மரங்கள் வருடம் முழுவதும் பசுமை நிறைந்த இலைகளுடன் காணப்படுவதாலும், கொத்துக்கொத்தாக மலரும் மலர்கள் மற்றும் சதைப்பற்று மிக்க காய்கள் கொண்டு, கண்களைக் கவரும் விதத்தில் அமைந்திருப்பதாலும், அதிக அளவில் படர்ந்து நிழல்கள் தருவதாலும், தற்காலங்களில், குடியிருப்புகள் மற்றும் சாலையோரங்களில் குளுமை அளிக்கவும், அழகுக்காகவும், புன்னை மரங்கள் வளர்க்கப் படுகின்றன. நெடுஞ்சாலைகளிலும், நகரச் சாலைகளிலும், நிழலுக்காகவும், பசுமை வண்ண இலைகளின் செழுமைக்காவும், புன்னை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. அம்மன் திருக்கோவில்களில், பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ள ஊர், புன்னை மரங்கள் நிறைந்த சோலை வனமாக இருந்ததால், பண்டைய காலத்தில் இருந்து, அந்த ஊர், புன்னைநல்லூர் என்று, அழைக்கப்பட்டு வருகிறது.
புன்னை மரம், வியாதிகளைப் போக்கும் அற்புத மரமாக விளங்குகிறது, உடலில் தோன்றும் சளி, தலைவலி, கண் சூடு, வயிற்று வலி மற்றும் வாத, சரும வியாதிகளைப் போக்கும் மருந்தாகவும், உடலின் செயல்பாட்டை ஊக்கப் படுத்தி, உடலுக்கு நன்மை தருவதாகவும் விளங்குகிறது.
புன்னை மரத்தின் மற்றொரு பயன்பாடு, இதன் கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணையாகும், முற்காலங்களில் மக்கள் வீடுகளில் விளக்கெரிக்கவும், சாலைகளில் தெரு விளக்குகளிலும் இந்த எண்ணையையேப் பயன்படுத்தி வந்தனர்.

மழை வரப்போவதை உணர்த்தும் மரம் :
மனிதர்களுக்கு, இயற்கை தந்த அருட்கொடையாகத் திகழும் புன்னை மரம், மனதுக்கு புத்துணர்வு அளித்து, வியாதிகளைப் போக்குவதோடு மட்டுமல்லாமல், பருவ நிலையில் ஏற்படப் போகும் மாறுபாடுகளையும் முன்கூட்டியே, உணர்த்த வல்லவை. புன்னை மரத்தில் மலர்கள், அதிக அளவில் பூத்துக்குலுங்கும் சமயத்தில் அவை உணர்த்துவது, இன்னும் சில நாட்களில், நிச்சயம் மழைப் பொழிவு ஏற்படும். இதை மக்களுக்கு குறிப்பால் உணர்த்தவே, அவை அந்த சமயங்களில், அதிக அளவில் பூக்கின்றன, என்று கிராமங்களில் சொல்வர்.
புயல் அடித்தாலும் சாய்ந்திடாத மரமாகவும், பூச்சி, கரையான்கள் அரிக்க முடியாத உறுதியான மரமாகவும் விளங்குவதால், புன்னை மரங்களை, படகுகள் கட்டவும், வீடுகளில் மரச் சாமான்கள் செய்யவும் உபயோகிக்கின்றனர்.

உடல் சூட்டினால் கண்களில் ஏற்படும் வலி, பார்வைக் குறைபாடு மற்றும் எரிச்சல் பாதிப்புகளை சரி செய்ய, புன்னை இலைகளை சற்று நேரம் நீரில் இட்டு, பின்னர் அந்த நீரில் கண்களை நன்கு அலசி வர, கண் பாதிப்புகள் சரியாகும்.
புன்னை இலைகளை மையாக அரைத்து, நெற்றியில் பற்று போல தடவி வர, ஒற்றைத் தலைவலி மற்றும் தலைச் சுற்றல் பாதிப்புகள் விலகும்.

கோடைக்காலங்களில் உடலில் தோன்றும், கொப்புளங்கள், சொறி சிரங்கு மற்றும் சர்க்கரை பாதிப்பால் ஏற்படும் சிறுசிறு காயங்கள் போன்ற பாதிப்புகள் விலக, புன்னை இலைகளை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் அந்த நீரில் குளித்து வர, பாதிப்புகள் யாவும் உடலில் இருந்து, விலகி மறையும்.

புன்னை மரத்தின் மலர்களை உலர்த்தி எடுத்து, அரைத்தபின், அந்தக் கலவையை சிரங்குகளின் மேல் தடவி வர, அரிப்பெடுத்த சிரங்குகள், விரைவில் ஆறி விடும்.

புன்னை மலர்களைத் தூளாக்கி, அந்தப் பொடியை தினமும் இருவேளை ஜுரம் வந்தவர்களுக்கு சாப்பிடக் கொடுக்க, சாதாரண ஜுரமும் விலகி விடும், டைபாய்டு ஜுரமும் குணமாகி விடும்.

ஆர்த்ரைடிஸ் எனும் முடக்கு வாத வியாதிக்கு, புன்னை மரத்தின் காய்களில் உள்ள விதையை நன்கு உலர்த்தி, அதில் சிறிது நீர் விட்டு கொதிக்க வைத்து, வாத வியாதிகளின் பாதிப்புகள் உள்ள இடங்களில் பற்று போலத் தடவி வர, உடலில் ஏற்பட்ட வாத வலி உள்ளிட்ட, வாத பாதிப்புகள் விலகும்.

புன்னை இலைகள், மலர்கள், காய்கள் மற்றும் பட்டைகளை நன்கு உலர்த்தி அவற்றை அரைத்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு, தினமும் காலையில் சாப்பிட்டு வர, கைகால் மூட்டு வலி மற்றும் சரும பாதிப்புகள் நீங்கும்


No comments:

Post a Comment