Friday 22 November 2019

சந்தன மரம்


சந்தன மரம்



தமிழக காடுகளில் குறைந்து வரும் சந்தன மரங்கள்.வீட்டில் வளர்க்க அனுமதி கொடுத்தும் பலன் இல்லை. தமிழக காடுகளில் சந்தன மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சந்தன மரங்களை வீடுகளில் வளர்க்க அரசு அனுமதியளித்துள்ளது. இருந்தும், மரம் வளர்ந்த பின், அதை வெட்டி விற்பதில் உள்ள சிக்கலால், மக்கள் சந்தன மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை.தமிழகத்தில், சேலம் வன மண்டலத்தில், கல்ராயன் மலை, அரூர் மலை, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஜவ்வாது மலையிலும் சந்தன மரம் அதிகமாக விளைந்து வந்தன. இவற்றை கண்டறிந்து, உரிய பருவத்தில் வெட்டியும், திருட்டு வழக்கில் பிடிபடுபவற்றையும், திருப்பத்தூர். சத்தியமங்கலம், சேலம் ஆகிய, மூன்று சந்தன மர குடோன்களில், வனத்துறையினர் சேர்க்கின்றனர். இதிலும், திருப்பத்தூர், சத்தியமங்கலத்தில் சந்தனக்கட்டை இருப்பு குறைந்து விட்டது.
சேலம் குடோனில் மட்டுமே, 400 டன் வரை சந்தனக்கட்டை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவற்றையும், வியாபாரிகள் ஏலம் எடுக்க, தயங்கி வருகின்றனர். பெயர் குறிப்பிட விரும்பாத வன உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: காடுகளில், சந்தனமரத்தை யாரும் விதை போட்டு வளர்ப்பது இல்லை.பறவைகள், சந்தன பழங்களை விதையுடன் விழுங்கும். இவை, வேறிடத்திற்கு உணவு தேடி பறக்கும்போதே எச்சமிடும். அதில், உள்ள விதை மண்ணில் விழுந்து, அச்சமயத்தில் மழையும் பெய்தால் விதை, செடியாகி, மரமாகும். ஆனால், சமீப காலமாக, புதியதாக சந்தனச்செடி ஏதும் வளரவில்லை.
மேலும், காட்டில் விளைந்த சந்தன மரத்தை சமூக விரோதிகள் அடியோடு வெட்டிச் செல்கின்றனர். இதற்கு, உள்ளூர் வன அதிகாரிகள் சிலரும், உடந்தையாக உள்ளனர்.
சந்தன மரத்தை வீடுகளிலும், தோட்டங்களிலும் வளர்த்தாலும், வெட்டுவதற்கு முன், வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். வனத்துறை குடோனுக்கு தான் விற்க வேண்டும், வனத்துறை நிர்ணயித்த தொகை தான் கிடைக்கும் என, விதிமுறை உள்ளது. இதனால், வளர்ப்பவருக்கு லாபம் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.
மேலும், வீடு, தோட்டத்தில் வளர்த்தால், சந்தன மரம் பலன் தரும் சமயத்தில், திருடர்கள் வெட்டி எடுத்துச் செல்கின்றனர். இதை தடுப்பவர், உயிருக்கும் ஆபத்தாக முடிகிறது.
எனவே, சந்தன மரத்தை வீட்டில் வளர்க்க மக்கள் அச்சப்படுகின்றனர். இப்படி பல்வேறு காரணங்களால் சந்தன மரங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
சந்தன மரம் வளர்ப்பது எப்படிசந்தன மர உற்பத்தியை அதிகப்படுத்த, புதிய முயற்சியாக, சேலம் சந்தனக்கிடங்கில், சந்தன நாற்றுகளை குறைந்த விலைக்கு, வனத்துறையினர், பொதுமக்களுக்கு விற்று வருகின்றனர். சேலம் தெற்கு வனச்சரக ஆபீசில், 5,000 சந்தன நாற்றுகள் உள்ளன. 2011 டிசம்பர் மாதம் சந்தன நாற்று ஒன்று, 15 ரூபாய் விலைக்கு விற்கப்பட்டது. சேலம் பெரியார் பல்கலையைச் சேர்ந்த பெரியசாமி, 1,000 நாற்றுகளை வாங்கிச்சென்றார். இதில், 600 நாற்றுகள் பட்டு போய் விட்டன.சந்தன நாற்றை மற்ற மர வகையை போல எளிதாக வளர்க்க இயலாது. முதலில், தனக்கு தேவையான சத்தை, தானே மண்ணில் இருந்து உறிஞ்சிக்கொள்ள சந்தன செடியால் முடியாது. அருகில் வளர்க்கப்படும் துவரை போன்ற பயிர்களின் வேர்களில் இருந்து தான், உயிர் பிடிக்க தேவையான சத்தை உறிஞ்சும். சந்தன மர விதையை நேரடியாக மண்ணில் விதைக்கலாம். பாலிதீன் பைகளில் விதையை ஊன்றியும் வளர்க்கலாம். சந்தனமரம் ஒட்டுண்ணி ரகத்தை சேர்ந்தது. மற்ற செடி, மரத்தை சார்ந்தே வளரும். எனவே, சந்தன விதையை தூவும் குழியில் துவரை, சவுக்கு, கொடுக்காப்புளி, தைலமரம் என, ஏதாவது ஒரு தாவர விதையையும், போட்டால் சந்தன மரம் முளைக்கும்.
விற்க முடியுமா?சந்தனமரம், 40 அடி முதல், 50 அடி உயரம் வரை வளரும். ஒன்று முதல், 2.4 மீட்டர் சுற்றளவு இருக்கும். சந்தனமரத்தை வளர்க்க, அரசு மற்றும் வனத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டியது இல்லை. ஆனால், மரத்தை வெட்ட தடை உண்டு. பட்டு போன பின் மரத்தை வெட்டலாம். அடி வேர் முதல் அனைத்தையும் வெட்டி எடுத்து, மாவட்ட வன அதிகாரி அனுமதி பெற்று வனத்துறையினர் எடுத்துச் செல்வர்.இதில், 80 சதவீத தொகை தான் மரம் வளர்ப்போருக்கு கிடைக்கும்; 20 சதவீதம் வனத்துறை எடுத்துக்கொள்ளும்.

No comments:

Post a Comment