Friday 22 November 2019

மரம் - தமிழ் கவிதைகள்


மரம் வளர்ப்போம் கவிதை - கவிஅன்பு

மனிதனே சிந்திப்பாயா மரம் பற்றி...
மரம் வளர்க்க சொல்கிறேன் உன் கரம் பற்றி..    

குடம்குடமா தண்ணீரை  குடிச்சும் தாகம் தீரல !..
கோடையோட வெப்பமது கொஞ்சமும் மாறல !!
வெயிலுக்கு இளைப்பாற  மரமில்ல -ஆனாலும்
மனுசனுக்கு மரம் வளர்க்க இங்க மனமில்ல !!

கண்ட இடங்களில் கட்டிடம் முளைத்து
கண்போன்ற மரங்கள் காணாமல் போனால்
கோடை வெப்பம் கொளுத்தாமல் - நம்மை
கொஞ்சவா செய்யும்? - பூமியின்
பச்சையை அழித்து பலவண்ணம் ஏந்துகிறோம்
களைப்புடன் நடை ! கைகளில் வண்ண குடை !

மழை நீருக்கு மரங்கள்தானே  கருவானது !
அதை மெல்ல அழித்ததால் தெருவெங்கும்
குடிநீர் பஞ்சம்தானே இங்கு உருவானது !!...
மரம் கொன்று மழை வேண்டி இங்கே யாகங்கள்!
கலிகால மனிதரால் மரங்களோடு  சேர்ந்து
மறைந்து போகிறது வான் மழை மேகங்கள்!!

வறுத்தெடுக்கும் வானத்து சூரியனால்
வாடி போகிறது  தேகங்கள் !
வாசல்தோறும் குடிநீர் பஞ்சத்தால்
தணியாமல் நீளும்  மனித தாகங்கள் !!

கோடைக்கு இயற்கை  மரங்கள் அன்றி
குளிர்சாதன செயற்கையை  நீ நாடினால்
பக்கவிளைவில் பாதிக்கப்பட்டு
பாழாய் போயி விடும்  உன் உடல் !
உன் நலன் காக்கவும் உரிமையோடு
மரம் வளர்க்க சொல்லி நான்
வரைகிறேன் இந்த கவிதை மடல் !!.....
மரம் வளர்ப்போம் ..
மரமே நமக்கு கடவுளின் கொடை....
வெயிலுக்கு இனி கைகளில் வேண்டாம் குடை ..
மரமே பூமியின் பசுமை ஆடை
மரம் இருந்தால் வதைக்குமா இந்த கோடை?வியர்வையில் குளிக்காமல்
நம் சந்ததி  தண்ணீரில் குளிக்க
மரங்களை வளர்த்து வைப்போம்
கட்டிடங்களை விட பூமியில் மர
விதைகளை அதிகம் விதைப்போம்....
இனியும் மரம் வளர்க்காமல்
சுயநல மனிதனாய்  பூமியில்  நீ
சுற்றி வந்தால் காணாமல் அழிந்து போவது
மரங்கள் மட்டும் அல்ல
வாட்டும் வெயில் தண்ணீர் பஞ்சத்தோடு
வறட்சியில் சிக்க போகும் உன்
வருங்கால சந்ததியும்தான்
             


    - கவிஞர்  கவிஅன்பு..










மரங்களின் மடல் ...


உயிர் இருந்தும் நிலையானோம் ...
நிலை பெற்றும் நிழல் தந்தோம் ...
நிழல் தந்து சிலை காத்தோம் ...
நான்  காத்த சிலை உன்னை காக்கும் என்றாய
சிலை காத்த என்னை ஏன் காக்க மறந்தாய் ...
கரிவாயு உட்கொண்டு , உயிர் வாயு உமக்களித்தோம் ....
பிறர்  , உயிர் பிழைக்க மழை தந்தோம் ...
வந்த , மழை கொண்டே உயிர்  பிழைத்தோம் ....
எழுத்துக்கு காகிதமாய் ,உலகெங்கும் உருப்பெற்றோம் ...
எதையெதையோ உருவாக்க , எரிபொருளாய் உருக்குலைந்தோம் ...
பசுமை என்னும் பாற்கடலை , மண் மேலே படைத்திருந்தோம்  ....
ரசனை என்பது சிறிதுமின்றி , வனத்தோடு வதம் செய்தாய் ...
வானளவு வளர்ந்திருந்தோம் , வாள் கொண்டு வதை செய்தாய் ...
நோயற்ற வாழ்வளித்தோம் , நொடிப் பொழுதில் வீழ்த்திவிட்டாய் ...
வானம் பார்த்த பூமியிலே , வனம் காக்க யாருமில்லை ...
வீட்டுக்கொரு மரம் வளர்த்தால் , வீதிக்கே மழை கொடுப்போம் ...
காட்டை நீ காத்து வந்தால் , நாட்டுக்கே நலம் சேர்ப்போம் ...
வனம் யாவும் செழித்திருந்தால் , வளமாகும் தேசம் எங்கும் ...
இயற்கை வளங்களை  காத்திடுவோம் , இயற்கையோடு  இணைந்திருப்போம் ...


ஒற்றைப் பனை மரம் - தமிழ் கவிதைகள்
ஒற்றைப் பனைமரம் ஒன்று
ஓங்கி நிமிர்ந்து நிற்கிறது
கிளையிட அதற்க்கு வழியில்லை
அதில் பறவைகள் ஏதும் தங்கவில்லை
நாணல் போல் அது வளையவில்லை
நானிலத்தில் யார்க்கும் அஞ்சவில்லை
இயற்க்கை சீறி அதை தீண்டினாலும்
இயைந்து சற்றும் கொடுக்கவில்லை
இளைப்பாற அதற்க்கு நிழல் இல்லை
இருந்தும் அது சற்றும் தளரவில்லை
பல வகையில் பலன் தருகிறது
பலனை மட்டும் எதிர் நோக்கவில்லை
பார்க்க முரடாய் தோன்றினாலும்
பருகும் இனிமைத் தருகிறது
காற்றுத் தேவன் கடுமை இருந்தும்
பூமித்தாயின் பிடியில் நிற்கிறது
வாழ்க்கை என்னும் பாதையிலே
நாம் பயணம் செய்து போகையிலே
பல பனைமரம் நடுவில் நிற்கின்றன
நமக்கு பலனைத் தந்து மறைகின்றன
கண்டும் காணாமல் நாம் சென்றாலும்
நம் கருத்தில் புகுந்து நிறைகின்றன 


No comments:

Post a Comment