Tuesday 19 November 2019

புளியமரம்

புளியமரம் காடுகளில் தானாக வளரும். சாலை ஓரங்களில் இம்மரத்தை வளர்ப்பதும் உண்டு. ஆனால் தென்னை, மா, பலா, முந்திரி போன்ற மரங்களைப் போல் இம்மரத்தைப் பெரும் எண்ணிக்கையில் வளர்ப்பதில்லை. புளியமரம் பெரும்பாலும் நட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னரே காய்த்துப் பயன்தரத் தொடங்குகிறது. இது 100 ஆண்டுகளுக்கு மேலும் வளரும்.

புளியமரம் 25 மீட்டர் உயரம் வளரும். 8-10 மீட்டர் சுற்றளவைக் கொண்டிருக்கும். இம்மரம் உறுதியானது. இதன் பக்கக் கிளைகள் பரவிக் காணப்படும். இவை எளிதில் முறிவதில்லை.

பண்டைய காலங்களில், இன்று போல நிமிடத்திற்கொரு பேருந்து வசதிகள் இல்லை, அருகில் இருக்கும் ஊருக்கு செல்வதனாலும் சரி, தொலைதூர ஊர்களுக்கு செல்வதானாலும் பெரும்பான்மை மக்கள் எல்லோரும் கால்நடையாகத்தான் செல்வார்கள், அந்த சமயங்களில் பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து வந்த களைப்பு நீங்கி, சற்று ஓய்வெடுத்து செல்ல, அவர்களுக்கெல்லாம் இக்கால சாலையோர சிறு மோட்டல்கள் போல அக்காலத்தில் அமைந்தவைதான், நிழல் தரும் புளிய மரங்கள். பகலில் புளிய மரங்கள் வெளியிடும் ஆக்சிஜன் காற்று களைப்படைந்தவர்களை, புத்துணர்வூட்டி, நடையைத் தொய்வின்றித் தொடர வைக்கும்.

அக்காலங்களில், ஆண்மீகக் கருத்துகளை சொல்லும்போது, உலக விஷயங்களில், "புளியம் பழமும் ஓடும் போல இருங்கள்!" என்று குறிப்பிடுவார்கள், நன்கு பழுத்த புளியம் பழத்தின் சதை, அதன் ஓட்டில் ஒட்டாது விலகியே இருக்கும், அதுபோல, மனிதர்கள் உலகில் மக்களோடு கலந்து வாழ்ந்தாலும், உலக விசயங்களில் பற்றுக்களை விலக்கி வாழ்ந்து, நற்கதி அடையவேண்டும் என்பதே, இந்த சொலவடையின் பொருள்.

பாதசாரிகளுக்கு உதவும் வண்ணம் அக்கால ஆட்சியாளர்கள், சாலையோரங்களில் எல்லாம் நிழல் தரும் புளிய மரங்களை நட்டு வளர்த்தனர். இந்த காலத்தில் அதுபோல யாரும் நடப்பது இல்லையாகையால், வாகனங்களில் செல்வோர் தாக சாந்தி செய்ய, சாலையோரங்களில், தண்ணீர் கடைகளை (!?) திறந்து வைத்து, குடிமக்கள் திருப்தியடைய வழி வகைகள் செய்திருக்கின்றனர்.

புளிய மரம், மனிதருக்கு நிழல்கள் மட்டும் தருவதில்லை, தமிழர் உணவில் சுவைக்காகவும், உடல் நலத்திற்காகவும், சேர்க்கப்படும் ஒரு முக்கிய பொருளாகவும் திகழ்கின்றன.

எண்பது அடிகள் வரை உயர்ந்து வளரும் புளிய மரங்கள், நூறாண்டுகள் வரை வாழும் தன்மை மிக்கவை, செடியாக நட்டு வளர்ப்பதன் மூலம் அதிகபட்சம் நான்கு ஆண்டுகளில், காய்க்கத் தொடங்கிவிடும், வெப்ப மண்டல மரமான புளியமரத்திற்கு ஓரளவு வளர்ந்தபின் தண்ணீர் தேவையில்லை, வேறு எந்த பூச்சிகள் தொல்லையுமில்லை ஆயினும், குளிர் பிரதேசத்தில் மட்டும் இவை வளராது.

புளிய மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள், பழத்தின் கொட்டைகள், பட்டைகள் அதன் பிசின்கள் என அனைத்தும் பலன் தரக்கூடியவை. அதன் மரம் உறுதிமிக்க மரச்சாமான்கள் செய்ய பயனாகின்றன.

புளிய இலையின் பயன்கள்

சித்த மருத்துவத்தில், புளிய இலை சிறந்த வலி நிவாரணியாக கூறப்படுகிறது.

வலி நிவாரணி :

உடலில் கை மற்றும் கால்களில் ஏற்படும் வீக்கங்கள் குறைய, புளிய இலைகளை சூட்டில் வதக்கி ஒரு துணியில் வைத்து, அவ்விடங்களில் ஒத்தடம் கொடுத்து, அதன்பின் வீக்கங்களின் மேல் வதக்கிய புளிய இலைகளை கட்டிவரலாம்.

கால்களில் , கைகளில் தண்ணீர் படும் இடங்களில் உள்ள காயங்கள் எளிதில் ஆறாது, அந்தக் காயங்களை ஆற்ற, புளிய இலைகள், வேப்பிலைகள் இரண்டையும் நீரில் கொதிக்க விட்டு, அந்த நீரை காயங்களின் மேல் நன்கு ஊற்றி சுத்தம் செய்ய, அவை விரைவில் ஆறி தழும்பு விட்டுவிடும்.

ரத்தம் சுத்தமாக :

மலேரியா போன்ற கொசுக்களால் ஏற்படும் விஷ சுரங்கள் விலக, புளிய இலைகளை நன்கு காய்ச்சி, பனை வெல்லம் சேர்த்து பருகிவர, காய்ச்சல்களின் வீரியம் குறையும், இரத்தம் சுத்தமாகும்.

வயிற்றுப் பூச்சிகளுக்கு :

காபிக்கு டிகாக்சன் தயார் செய்யும்போது, சிறிது புளிய இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை ஊற்றி டிகாக்சன் செய்ய, காயங்களை ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும், இந்த டிகாக்சனில் காபி பருக, குழந்தைகளின் வயிற்று பூச்சிகள் அழிந்து, குழந்தைகள் நன்கு பசியெடுத்து சாப்பிடுவர்.

கொழுந்தான புளிய இலைகளை வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து, கூட்டு போல செய்து சாப்பிட, உடல் வலுவாகும்.

கண் பாதிப்பு குறைய :

புளிய இலைகளைப்போல, அதன் பூக்களும் நலம் தருபவை, புளியம் பூவை துவையலாக செய்து சாப்பிட, தலைச்சுற்றல் மயக்கம் சரியாகும். கண் சிவப்பு மறைய, புளியம் பூக்களை அரைத்து கண்களைச் சுற்றி பற்று போட்டுவர வேண்டும்.

புளியம் பழம் :

சத்துக்கள் :

நன்கு பழுத்து சதைப் பற்றுடன், சற்றே இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுள்ள புளியம் காய்களே, வெயிலில் நன்கு காயவைத்தபின், சமையலில் நாம் உபயோகிக்கும் புளியாக கிடைக்கிறது. புளியில் வைட்டமின், கால்சியம், இரும்பு மற்றும் தாதுச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

புளியம் பழத்தின் நன்மைகள் :

புளியின் பொதுவான மருத்துவ குணங்கள், மலச் சிக்கலை சரிசெய்யும், உடல் சூட்டை சீர்செய்து, கண் எரிச்சலை போக்கி, உடலை நலமாக்கும். சமையலில் இன்றியமையாத ஒரு பொருளாக, புளி விளங்குகிறது. புளி சேர்க்காத சாம்பார், குழம்பு, மற்றும் இரசம் என்பது, தமிழகத்தில் வெகு அரிதான ஒன்று.

புளியை நீரில் சுட வைத்து, உப்பிட்டு, அதை இரத்தக் கட்டுகளின் மேல் பூசிவர, இரத்தக் கட்டுகள் யாவும் குணமாகும்.

வாய்ப்புண் குணமாக :

தேள் கொட்டிய விஷம் இறங்க, வலி போக, புளியை சுண்ணாம்பு கலந்து, கடித்த இடத்தில் இட வேண்டும். வாய்ப் புண்கள் குணமாக, புளி கலந்த நீரில் அவ்வப்போது, வாயை கொப்புளித்து வரலாம்.

அளவுக்கு மீறி மது அருந்தியவர்கள் சிலர், அதிக ஆவேசப்பட்டு, சுற்றியுள்ளவர்களை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள், மீதி சிலர், மது போதை தலைக்கேறி, தன்னிலை மறந்து மயங்கிக் கிடப்பர், இந்த மோசமான நிலையிலிருந்து இவர்களைத் தெளிய வைக்க, புளியை கரைத்து அந்த நீரை பருக வைக்க, இயல்பு நிலைக்கு திரும்புவர். புளியால் வெள்ளி, பித்தளை, செம்பு போன்ற பாத்திரங்கள் ஆபரணங்களை, தூய்மை செய்து, பளபளப்பாக்கலாம்,

புளியங் கொட்டை

புளியங் கொட்டையில் அரிசியில் உள்ளது போன்ற மாவுச்சத்தும், ஆல்புமின் எனும் தாதுவும் மற்றும் எண்ணைத் தன்மையும் உள்ளன. புளியங் கொட்டைகளை தூளாக்கி, பாலில் சிறிது இட்டு, பனங்கற்கண்டு கலந்து பருகிவர, உயிர்த்தாது வளமாகும்.

புரதச் சத்துக்கள் :

உடலில் புரதச்சத்து குறைபாடு உள்ளவர்கள், புளியங் கொட்டைகளை வறுத்தோ வேக வைத்தோ உணவில் விரும்பும் வகையில் சேர்த்துவர, புரதக் குறைபாடுகள் நீங்கி, உடல் நலம் பெறலாம்.

இரவுகளில் ஏன் தூங்கக் கூடாது :

வெப்பத்தை வெளியிடும் புளியமரம் பகலில் ஆக்சிஜனை அதிக அளவில் வெளியேற்ற, அதை சுவாசிக்கும் வழிப் போக்கருக்கும் அதன் நிழலில் இளைப்பாருபவர்களுக்கும், அவை நன்மை தரும்.

அதுவே இரவில், அதிக அளவில் உடலுக்கு தீங்கு செய்யும் கார்பன் மோனாக்சைடு வாயுவை அதிகம் வெளியேற்றுவதால், இரவில் புளிய மரத்தடியில் படுத்து உறங்க, அந்த காற்று சுவாசத்தில் தடை ஏற்படுத்தி, மூச்சடைப்பை ஏற்படுத்தும்,

எனவே தான், இரவில் புளிய மரத்தடியில் உறங்க வேண்டாம், கால்நடைகளையும் இரவில், அம்மரத்தில் கட்டி வைக்க வேண்டாம் என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள். அக்காலங்களில் அறிவியல் உண்மைகளை, மக்களை பயமுறுத்தும் வண்ணமே, சொல்லி எச்சரித்தனர், அதனால் தான், அதிக படிப்பறிவில்லாத மக்களும் அதை ஏற்று நடந்து வந்தனர்.

No comments:

Post a Comment